சாத்தான்குளம் அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு

சாத்தான்குளம், ஏப். 25:  சாத்தான்குளம் அருகே இடப்பிரச்னையில் விவசாயி உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் அருகேயுள்ள மேலபனைகுளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் தாமஸ் ஜெயசீலன்(44). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் பேய்க்குளம்-உடையாண்டி சாலை யில் உள்ளது. நிலம் தொடர்பாக இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோயில்பிச்சை மகன் செல்வின் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. ஜெயசீலன் தற்போது தனது நிலத்தில் மாட்டு தீவனம் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை செல்வின் மற்றும் அவரது மகன்கள் ஏசுதாசன், டேனியல் ஆகிய 3பேரும் ஜெயசீலன் நிலத்தில் புகுந்து பயிர்களை வெட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த ஜெயசீலனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அப்போது தடுக்க முயன்ற ஜெயசீலனின் சகோதரர் ஆரோக்கியராஜ் மகன் விஜய்அஸ்வினுக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் தாமஸ் ஜெயசீலன், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையிலும் விஜய்அஸ்வின் நெல்லை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தை தொடர்ந்து ஜெயசீலனின் தோட்டத்தில் இருந்த டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிளை செல்வின் தரப்பினர் எடுத்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சகாயசாந்தி, எஸ்.ஐ. லூயிஸ் லாரன்ஸ் வழக்கு பதிந்து  செல்வின் (45). அவரது மகன் ஏசுதாசன் ஆகியோரை கைது செய்தனர். டேனியலை தேடி வருகின்றனர்.

Related Stories: