களக்காடு, ஏப். 25: களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், நீலகிரிவரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் உள்ளன. இவைகள் அவ்வவ்போது மலையடிவார பகுதியில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக சிதம்பரபுரம் மலையடிவார பகுதியான சத்திரங்காடு, சாஸ்தா கோயில், கோழிக்கால் பகுதிகளில் ஒற்றை ஆண் யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பனை மரங்களை துவம்சம் செய்து வருகிறது. வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்ட போதும் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் இப்பகுதியிலேயே சுற்றி திரிகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட பனை மரங்களை யானை சாய்த்துள்ளது.