தென்காசி, ஏப். 25: குற்றாலத்தில் நேற்று சுட்டெரித்த வெயிலால் மெயினருவி மற்றும் ஐந்தருவிக்கு நீர்வரத்து குறைந்தது. குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவில் பலத்த இடியுடன் மழையும் தொடர்கிறது. இரு நாட்களுக்கு முன்பு பகலில் வெயில் நீடித்த நிலையில் இரவு 9.15 மணியளவில் இடியுடன் மழை கொட்டியது. இதனால் நள்ளிரவு 12 மணி முதல் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரந்து விழுந்தது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியிலும் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் தொடர்ந்து சுள்ளென வெயில் அடிப்பதால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. வனப்பகுதியிலும் மழை இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறையத் துவங்கியது.