சங்கரன்கோவில், ஏப். 25: சங்கரன்கோவில் நகர பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை மனு அளித்தனர். சங்கரன்கோவில் நகராட்சி பகுதிக்கு கோட்டமலை, மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், கோட்டமலை பகுதியில் இருந்து தண்ணீர் வரத்தில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களாக பரவலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கோட்டமலையில் இருந்து தண்ணீர் வராததால், சில பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்ப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக நகர செயலாளர் சங்கரன், மதிமுக நகர செயலாளர் ஆறுமுகசாமி, திமுக மாவட்ட இலக்கிய அணி சுப்பையா, காங்கிரஸ் நகர தலைவர் உமாசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் குருசாமி, மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் அசோக்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் நகராட்சி மேலாளர் லட்சுமணனிடம் மனு அளித்தனர்.