ரங்கம் கோயில் சித்திரை திருவிழா இன்று தொடக்கம் மே 3ம் தேதி தேரோட்டம்

மண்ணச்சநல்லூர், ஏப்.25:  ரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சித்திரை தேர் திருவிழா தொடங்குகிறது. வரும் மே 3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.  108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் சிறப்பும் வாய்ந்தது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். ரங்கம் நம்பெருமாளை தரிசிக்க தமிழகம், இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். ரங்கம் அரங்கனுக்கு ஆண்டுதோறும் உற்சவ நாட்கள்தான். அவற்றில் முக்கியமான ஒன்று சித்திரை தேர் திருவிழா. இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதிகாலை 4.30 மணி முதல் 5.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு புறப்பாடு அடைந்து சித்திரை வீதிகளில் வலம் வந்து, சந்தனு மண்டபம் சேர்கிறார்.

தொடர்ந்து நம்பெருமாள் பல்லக்கு, கற்பக விருட்சம், சிம்மம், யாழி, இரட்டை பிரபை, சேஷ, ஹனுமந்த, தங்க ஹம்ச வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சித்திரை வீதிகளில் இரவு நேரங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாவிக்கிறார். 28ம் தேதி கருட சேவை நடைபெறுகிறது. மே 1ம் தேதி 7ம் திருநாளில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் மே 3ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5.15 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து 4ம் தேதி திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும் 5ம் தேதி ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.  விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Related Stories: