தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரம் போலி நர்சிங் கல்லூரிகள் இயங்குகின்றன: மாநில சங்க தலைவர் பேட்டி

வேலூர், ஏப்.25: தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரம் போலி நர்சிங் கல்லூரிகள் இயங்குவதாக தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் மாநில சங்க தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் மாநில சங்க தலைவர் பாலாஜி வேலூரில் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக ஒரு நர்சிங் கல்லூரி தொடங்க வேண்டும் என்றால், இந்திய நர்சிங் கவுன்சில் அனுமதி பெறவேண்டும். அதன்பிறகு மாநில அரசின் அனுமதி பெற்றுதான் கல்லூரி தொடங்க முடியும். ஆனால் தமிழகத்தில் சுமார் 2000 போலி நர்சிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஓராண்டு, 2 ஆண்டு பயிற்சி எனக்கூறி மாணவ, மாணவிகளிடம் பல லட்சம் பறித்து மோசடி செய்து வருகின்றனர். இவற்றில் படித்த சுமார் 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதனால் மாணவர்களுக்கு பண விரயத்துடன், கால விரயமும் ஏற்படுகிறது. போலி நர்சிங் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் முறையாக பதிவு செய்யவும் முடியாது. எனவே அங்கீகாரம் பெறாத நர்சிங் கல்லூரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக நர்சிங் படிக்க விரும்புவோர் நர்சிங் கவுன்சில் வெப்சைட்டிற்கு சென்று அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரிகள் குறித்து அறிந்து அதன்பின்னர் நர்சிங் பயிற்சி பள்ளியில் சேர வேண்டும். உரிய பதிவு பெற்ற நர்சிங் நிறுவனங்களில் 3 ஆண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குறிஞ்சி செல்வம், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது முஸ்தபா, வேலூர் மாவட்ட தலைவர் பரந்தாமன், குமரன் நர்சிங் கல்லூரி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: