சோளிங்கர், ஏப்.25: சோளிங்கர் அருகே தந்தையை, கத்தியால் குத்தி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். மேலும், போலீசாருக்கு தெரிவிக்காமல் சடலத்தை அடக்கம் செய்ய முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள பள்ளமங்கலம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பஞ்சாட்சரம்(85), விவசாயி. இவரது மனைவி ரத்தினம்(75). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2வது மகன் ஏழுமலைக்கும், அவரது மனைவி கலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தகராறில், கலைச்செல்வி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதையடுத்து, பஞ்சாட்சரம் நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு போதையில் வந்த ஏழுமலை, ‘எனது மனைவியின் வீட்டிற்கு சென்று சமாதானம் செய்து அழைத்து வா' என கூறியுள்ளார். அதற்கு பஞ்சாட்சரம் மறுத்தாராம்.