ஆத்தூர், ஏப்.25: ஆத்தூர் முல்லைவாடி பகுதியில், கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக, ஆத்தூர் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து, ஆத்தூர் இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று, ஆத்தூர் கோட்டை வசிஷ்ட நதி பாலத்தின் அருகே, குற்றப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் முல்லைவாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(22), ஈஸ்வரன்(21) என்பதும், அவர்கள் ஓட்டி வந்த 2 வாகனங்களும், ஆத்தூர் கோட்டை பகுதியில் திருடப்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.