சேலம், ஏப்.25: சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் இஞ்சி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. நேற்ைறய நிலவரப்படி இஞ்சி, கிலோ ₹110க்கு விற்கப்பட்டது. இஞ்சி மிதவெப்ப மண்டலம் மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் விளைகிறது. 30முதல் 40 சதவீதம் வரை, இஞ்சி இந்தியாவில் விளைகிறது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் குறைந்த பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இஞ்சிக்கு மிதமான வெப்பநிலை அவசியம். காற்றில் ஈரப்பதம் மிக்க பகுதிகளில் நன்கு வளரும் ஆற்றல் உடையது. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் இஞ்சி தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னை மற்றும் கோடை வெப்பத்தால் குறைந்துள்ளது. இதனால் சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் கடந்த வாரம் கிலோ ₹96க்கு விற்கப்பட்ட இஞ்சியின் விலை மேலும் ₹14 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கிலோ ₹110க்கு விற்கப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.