பேரையூர், ஏப். 25: சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது அத்திபட்டி. இந்த ஊரிலுள்ள 1, 2, 3, வது வார்டுகளைச் சேர்ந்த பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் வழங்கப்பட்டு வந்த குழாய் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியிலுள்ள பெண்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் அடுத்தப்பகுதிகளில் குடிநீர் எடுக்க சென்றால், எங்களுக்கே பற்றாக்குறையாக உள்ளது, இதில் நீங்கள் வந்து தண்ணீர் பிடித்தால், நாங்கள் குடிக்கத்தண்ணீருக்கு எங்கே போவது என தண்ணீர் பிடிக்க விடமாட்டேங்குறார்கள் என இப்பகுதி பெண்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பிரசித்தி பெற்ற அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் திருவிழா ஏப்:28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.