போதை தலைக்கேறி 2 மூதாட்டிகளை கொன்ற பேரன்

உசிலம்பட்டி, ஏப். 25:  உசிலம்பட்டியில்  குடிபோதையில் தனது இரண்டு பாட்டிகளை கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேனிச்சாலை மேலப்புதூரில் வசித்து வருபவர் அய்யர் (எ) கூலுத்தேவர் மகன் முருகானந்தம்(40). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்களுடன் முருகானந்தத்தின் பாட்டி(கூலுத்தேவர் தாய்) பரிபூரணம், அவரது அக்கா வீரம்மாள்(97) வசித்து வந்தனர். நேற்று காலையில் கட்டிட வேலைக்கு சென்ற முருகானந்தத்திடம் பாட்டிகள் இருவரும்,  சாலையில் போகும் போது பார்த்து போ எனக் கூறியுள்ளனர்.  இந்த நிலையில் வேலைக்கு சென்ற முருகானந்தத்தின் டூவீலர் பஞ்சராகி விட்டது. இதனால் டூவீலரை ஓரங்கட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். வேலைமுடிந்து நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது சகுனத் தடங்கலாக பேசி உங்களால்தான் எதுவும் விளங்காமல்போகுது என பாட்டிகளைத் திட்டியுள்ளார். அதற்கு அவரது பாட்டிகள் பதில் சொல்லவும், கோபம் தலைக்கேறி அவர்களை முருகானந்தம் கால்களால் எட்டி உதைத்தும், அடித்துள்ளார். இதில் மூதாட்டிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். தகலவறிந்து வந்த உசிலம்பட்டி போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்த பேரன் முருகானந்தத்தை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: