கள்ளிக்குடியில் கொட்டுது மழை திருமங்கலத்தில் வாட்டுது வெயில்

திருமங்கலம், ஏப்.25: கள்ளிக்குடியில் கடந்த இரண்டு தினங்களாக மழைபெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அதே நேரத்தில் திருமங்கலத்தில் வாட்டி எடுக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மதுரை திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் மழைகொட்டி வருகிறது. இதனால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். அத்துடன் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை தீர்வதுடன் கோடைமழை தொடர்ந்தால் விளைச்சல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகளை இந்த மழை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகிடைக்கும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையில் நேற்று முன்தினம் மட்டும் 11.6 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் நிலங்கள் குளிர்ந்து வெப்பம் தணிந்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் அருகே உள்ள திருமங்கலம் தாலுகாவில் மழைப்பொழிவு இல்லை. கடும் வெப்பத்தினால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கள்ளிக்குடியில் பெய்யும் மழையில் சிறிய அளவு கூட திருமங்கலத்தில் இல்லை. அதே நேரத்தில் மாலை நேரத்தில் இடி, மின்னல் வெட்டினாலும், காற்றினால் மழைபொழிவு இல்லை. இது தாலுகா மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Related Stories: