மதுரை, ஏப். 25: மதுரை மாநகராட்சியின் அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தின் முன்பகுதி பறக்கும் பாலத்திற்கு தாரைவார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை- நத்தம் வரையிலான 35 கி.மீ. சாலையை ஏற்று ரூ. 1,028 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்கிறது. இதில் சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.4 கி.மீ. தூரத்திற்கு ரூ. 612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது. ரூ. 416 கோடியில் ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 28 கி.மீ. தூரம் நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. சொக்கிகுளம் பிடிஆர் சிலையில் நேராக இருந்து தெற்கு நோக்கியும், அழகர்கோவில் சாலையில் மாநகராட்சி ஈகோ பார்க் அருகில் இருந்தும், மாவட்ட நீதிமன்றம் நோக்கிய சாலையில் மாநகராட்சி வாயில் அருகில் இருந்தும் பறக்கும் பாலத்திற்கு ஏறி, இறங்கும் வகையிலும் பாதை அமைக்கப்படுகிறது.