பழநி அருகே 3 நாளாக மின்சாரம் ‘கட்’

பழநி, ஏப். 25: பழநி அருகே 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் கஞ்சநாயக்கன்பட்டி கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பழநி அருகே அமரபூண்டி ஊராட்சிக்குட்பட்டது கஞ்சநாயக்கன்பட்டி கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 21ம் தேதி இடி,  மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன்பின்பு 3 நாட்களாகியும் இதுவரை மின்விநியோகம் இல்லை. இதனால் இக்கிராமம் இருளில் தத்தளித்து வருகிறது. மின்சாரம் இல்லாததால் இரவுநேரங்களில் பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கண்ணன் கூறியதாவது, ‘கனமழையின் போது துண்டிக்கப்பட்ட மின்சாரம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக மின்வாரிய ஊழியர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. 3 நாட்களாக எங்கள் கிராமமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் வெளியில் நடமாட முடியவில்லை. மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட வேண்டியதிருக்கும்’ என்றார்.

Related Stories: