திண்டுக்கல், ஏப். 25: திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் குப்பைகளை முறையாக அள்ளாததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் காந்தி மார்க்கெட் பிரசித்தி பெற்றதாகும். சுதந்திர போராட்ட காலத்தில் கடந்த 1942ல் மகாத்மா காந்தியடிகள் இங்கு வந்து பேசியதால், இந்த இடம் காந்தி மார்க்கெட் என பெயர் பெற்றது. இங்கு தினமும் 15 முதல் 20 டன் காய்கறிகள் வரத்துள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இடநெருக்கடியில் செயல்படும் மார்க்கெட்டில் தினமும் சேரும் குப்பைகளை அள்ளுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முன்வருவதில்லை. இதனால் தினந்தோறும் மலைபோல் குப்பைகள் சேர்கின்றன. இந்த குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் மார்க்கெட்டிற்குள் மூக்கை பிடித்து கொண்டுதான் நடக்க வேண்டியுள்ளது.
மழை பெய்தால் துர்நாற்றத்துடன் சேரும், சகதியும் சேர்ந்து விடுவதால் மார்க்கெட்டில் கால் வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மார்க்கெட் சுத்தமாக இருந்தால்தான் காய்கறிகள் தூய்மையாக இருக்கும். நல்ல காய்கறிகள் கிடைக்கும் என்பதற்காகத்தான் இங்கு மார்க்கெட் வருகிறோம். ஆனால் இங்கு குப்பைக்குள் நடந்து சென்று காய்கறிகள் வாங்க வேண்டியுள்ளது. ஊரெல்லாம் குப்பை அள்ளும் மாநகராட்சி முறையாக காந்தி மார்க்கெட்டிலும் அள்ளுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் தொற்றுநோய், சுவாசக்கேளாறுகளால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றனர்.