திண்டுக்கல், ஏப். 25: திண்டுக்கல் மாநகராட்சியில் ஜிக்கா குடிநீர் திட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 500 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் பல இடங்களில் தண்ணீர் வராமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
திண்டுக்கல் மக்களுக்கு தடையின்றி தினமும் குடிநீர் வழங்க ஜிக்கா (ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு இணையம்) திட்டம் அமைக்கப்பட்டது. இதற்காக நகரில் உள் மற்றும் வெளிப்பகுதியில் 227 கிமீ.க்கு குடிநீர் பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் நடந்த நிலையில் தற்போது வரை 95 சதவீதம் பணிகள் முடிவுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில் ஆத்தூர் மற்றும் காவிரியில் இருந்து தினமும் 1.50 கோடி லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு விநியோகிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக பழைய குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு 27 ஆயிரத்து 500 வீடுகளுக்கு மீட்டருடன் பொருத்திய புதிய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்கு ரூ.10 கோடி கூடுதல் பெறப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஜிக்கா திட்டத்தில் இணைப்பு பெறப்பட்ட பல வீடுகளுக்கு தண்ணீர் வராமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.