திண்டுக்கல், ஏப். 25: பன்றி வளர்ப்பு பிரச்னையில் திண்டுக்கல்லில் வாலிபர் ஓட, ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் ரவுண்ட்ரோடு புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (35). இவரது மனைவி சந்திரா. மகள் கவுசல்யா. நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் காற்றாட வீட்டிற்கு வெளியே வந்த கார்த்திக்கை ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வெட்ட வந்தது. இதை கண்ட அவர் உயிரை காப்பாற்றி கொள்ள அனுமந்தன்நகர் மேம்பாலத்தில் ஓடினார். எனினும் அக்கும்பல் ஓட, ஓட விரட்டி அவரை சராமரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். தகவலறிந்ததும் திண்டுக்கல் நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலையாளிகள் விட்டு சென்ற அரிவாள், கத்தியை கைப்பற்றினர். பின்னர் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.