நெல்லை, ஏப். 24: நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு சேந்திமங்கலம் மறவர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் அகில பாரத இந்து மகா சபா மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நெல்லை மாநகராட்சி கமிஷனரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாநகராட்சி 4வது வார்டு சேந்திமங்கலம் மறவர் தெருவில் குடியிருக்கும் மக்கள், வழிபட்டு வரும் பாட்டுக்கல் சுடலைமாடசாமி கோயில் மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. கோயில் வாசலில் மாநகராட்சி மூலம் பாதாள சாக்கடைக்கு குழிகள் தோண்டப்பட்டு அங்கு கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
குழி தோண்டப்பட்ட இடத்தில் சாமிக்கு பொங்கல் வைப்பது மற்றும் விழா காலங்களில் கொடை விழா பலி கொடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே பாதாள சாக்கடை தேங்கும் குழியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். ஊர் பிரமுகர்கள் சூரியதேவன், மாயாண்டி, தங்கபாண்டியன், கணபதிராமன், சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.