சாத்தான்குளம், ஏப்.24: சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறிவிழுந்த ஆட்டை மீட்க முயன்ற சிறுவனும் கயிறு அறுந்ததால் தவறிவிழுந்து உயிருக்கு போராடினார். தீயணைப்பு படையினர் சிறுவன் மற்றும் ஆட்டை உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.சாத்தான்குளம் அருகேயுள்ள கீழபுளியகுளத்தை சேர்ந்தவர் சுயம்புபாண்டியன். இவரது மகன் நல்லகண்ணு(16) தற்போது 10ம்வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று மேய்ச்சலுக்கு சென்ற ஆடு திரும்பி வராததால் நல்லகண்ணு, மாலை ஆட்டை தேடி தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள 60 அடி கிணற்றில் ஆடு தவறிவிழுந்து உயிருக்கு போராடிய நிலையில் சத்தம் கேட்டது. இதையடுத்து ஆட்டை காப்பாற்ற எண்ணிய நல்லகண்ணு, கயிறுகட்டி கிணற்றில் இறங்கி ஆட்டை மீட்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததால் நல்லகண்ணுவும் கிணற்றில் விழுந்து தத்தளித்தார். அவரது சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பத்மநாபன் தலைமையில் வீரர்கள் சென்று கிணற்றில் தத்தளித்த சிறுவன் மற்றும் ஆட்டை மீட்டனர். இதில் சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆடு, கிணற்றில் தத்தளித்த இருந்ததால் காயமின்றி தப்பியது. தன்உயிரை பொருட்படுத்தாமல் ஆட்டை மீட்க முயன்று மாணவன் கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.