உடன்குடி, ஏப். 24: உடன்குடி பிள்ளைவிளை பகுதிகளில் மணல் லாரிகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனிடையே நேற்று ஊருக்குள் வந்த லாரியின் கதவுகள் திடீரென திறந்துகொண்டதால் சாலையில் மணல் கொட்டியது. அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் ஏதும் அந்த சமயத்தில் வராததால் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. உடன்குடி கல்லாமொழி பகுதியில் அனல்மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதியான இந்த பகுதியை கடல் மட்டத்தை விட உயரமாக்க பல ஏக்கர் பரப்பளவில் மணல்களை கொண்டு சீர்செய்து உயரப்படுத்தி வருகின்றனர். இந்த பணிக்கென தேவையான மணல்களை நாசரேத், மெஞ்ஞானபுரம், பன்னம்பாறை, உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த குளங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான டாரஸ் லாரிகளில் எவ்வித பாதுகாப்புமின்றி கொண்டு செல்கின்றனர். மேலும் மணல் கொண்டு செல்லும் லாரிக்கு வாடகை டன் அளவுக்கு குறிப்பிட்ட தொகை என்றிருப்பதாலும், டிரைவருக்கு எத்தனை லோடு கொண்டு சென்றிருக்கிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் தான் சம்பளம் என்றிருப்பதால் போட்டி போட்டுக் கொண்டு செல்கின்றனர். எவ்வித பாதுகாப்புமின்றியும், அனுபவமில்லா டிரைவர்கள், மோசமான நிலையில் உள்ள லாரிகள் என எந்த சாலை, வாகன விதிகளை முறையாக மதிப்பதில்லை.