ஓய்வு மின் அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

திருச்சி, ஏப்.24:  திருச்சி உறையூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 40 பவுன்  நகை கொள்ளை போனது.  திருச்சி உறையூர் பாத்திமா நகர் 2வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து(71). ஓய்வு பெற்ற மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர். இவரது மனைவி சிவகாமி. சிவகாமியின் அக்கா புவனேஸ்வரி மதுரையில் நேற்று முன்தினம் இறந்தார். துக்கம் விசாரிக்க சிவகாமி கணவருடன் வீட்டை பூட்டிவிட்டு மதுரைக்கு சென்றார். சாவியை அருகிலேயே மறைவான இடத்தில் வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாரிமுத்து வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 40 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. மர்ம நபர்கள் ஏற்கனவே நோட்டமிட்டு சிவகாமி மறைவான இடத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து திறந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.  இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. மேலும் வழக்குப்பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: