திருச்சி, ஏப்.24: தேர்தலை காரணம் காட்டி கர்நாடாகாவிலிருந்து தண்ணீர் திறக்காததால் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா விவசாய அணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் மாநில விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் உள்ள 25 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி ஆதாரமாகவும், 24 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் காவிரியும், மேட்டூர் அணையும் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி ஆணையம் இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காத அவல நிலை உள்ளது. அதே நேரத்தில் கர்நாடகா அணைகளின் நீர் திருப்தியாக உள்ளது என கர்நாடாக அரசு தெரிவித்துள்ளது.