விழுப்புரம், ஏப். 24: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தலையொட்டி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை இருந்தால் வரும் 29ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஊரக மற்றும் நகர் பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைத்தல், உத்தேசிக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் கடந்த 22ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிப்பிரிவு அலுவலகம், விழுப்புரம் மாவட்ட ஊராட்சி அலுவலகம், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சம்பந்தப்பட்ட சிற்றூராட்சி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களில் கண்டுள்ள வாக்குச்சாவடிகளின் விவரங்கள் தொடர்பாக ஏதேனும் கருத்துக்கள் தெரிவிக்க வேண்டுமானால் வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு நடத்தப்படும் கூட்டத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.