×

மரக்காணம் அருகே ₹5 கோடியில் கட்டப்பட்ட மீன் இறங்குதளம் இடிந்துவிழும் அபாயம்

மரக்காணம்,  ஏப். 24: மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் உள்ளது எக்கியர்குப்பம்  மீனவர் பகுதி. இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 300க்கும் அதிகமான பைபர் படகுகள், கட்டுமரங்கள் உள்ளன. இந்த  கிராமத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.5.4 கோடி செலவில் கடற்கரையோரம் மீன் இறங்குதளம் கட்டப்பட்டுள்ளது. இந்த மீன் இறங்குதளத்தில்  மீனவர்கள் வலை பின்னும் கூடம், ஒவ்வொரு மீனவரும் தங்களது வலைகள், படகுகளுக்கு பயன்படுத்தப்படும் என்ஜின்களை பாதுகாக்கும் அறைகள், மீன்கள்  ஏலம் விடும் இடம், ஓய்வறைகள், குடிநீர் தொட்டி, மீன்களை பதப்படுத்தும்  இடம், மீன்களை பதப்படுத்த ஐஸ் தயாரிக்கும் பகுதி, பாதுகாப்பு அறை உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் கொண்ட தனித்தனி அறைகளுடன் பல கட்டிடங்கள்  கட்டப்பட்டுள்ளது.  இந்த கட்டிடங்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு மூன்று  ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை முறைப்படி  திறப்பு விழா நடத்தி உரிய பயனாளிகளுக்கு இதுவரையில் ஒப்படைக்கவில்லை  என்று அப்பகுதி மீனவர்கள் குறைகூறுகின்றனர்.
இக்கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் முறையாக கட்டவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை நிரூபிக்கும்வகையில் கட்டிடத்தின் மேல்பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள இரும்பு தகடுகள் அனைத்தும் சேதமடைந்து இடிந்து  விழுகிறது. இதனால் மழை மற்றும் கோடைகாலத்தில் இந்த கட்டிடங்களை பயன்படுத்தமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மீனவர்களின் நலன்  கருதி இடிந்து விழும் மீன் இறங்குதளத்தை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Marakkan ,
× RELATED மரக்காணம் அருகே வரதட்சணை கேட்டு இளம்ெபண்ணுக்கு கொலை மிரட்டல்