ஓமலூர், ஆத்தூர், கெங்கல்லி பகுதியில் சூறை காற்றுடன் பெய்த மழைக்கு வாழை, பாக்கு மரங்கள் சேதம்

ஓமலூர், ஏப்.24: ஓமலூர், ஆத்தூர், கெங்கல்லி வட்டாரத்தில் பெய்த மழை மற்றும் சூறாவளி காற்றினால், ஆயிரகணக்கான வாழை, பாக்கு  மரங்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் ேவதனை அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த 3நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் வாழைகள் மற்றும் பாக்கு தோட்டங்கள் சேதமடைந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு அடித்த சூறாவளி காற்று மற்றும் கனமழையால் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி கிராமத்தில் துரைசாமி, முருகேசன் என்பவரது தோட்டங்களில் சாகுபடி செய்திருந்த,350 வாழை மரங்களும் வெங்கடாசலம் தோட்டத்தில் 250 வாழை மரங்களும், இளையபாரதி, தினேஷ் ஆகியோரது தோட்டங்களில் தலா 100 வாழை மரங்களும் சாய்ந்து உடைந்தது. ஏற்கனவே ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள தும்பிபாடி கிராமம் கூளையனூரை சேர்ந்த கோவிந்தசாமி தோட்டத்தில் 1500 வாழை மரங்கள், ஆசைதம்பி தோட்டத்தில் 1200 வாழைகள், தனசேகரன் தோட்டத்தில் 800 வாழைகள், ஓட்டதெரு ராஜாமணி தோட்டத்தில் 250 வாழைகள், டேனிஸ்பேட்டையை சேர்ந்த குருநாதன் தோட்டத்தில் 2000 வாழைகள் என சுமார் பத்தாயிரம் வாழை மரங்களும், சுமார் 2ஆயிரம் பாக்கு மரங்களும் உடைந்து சேதமடைந்துள்ளன.

மேலும், காவிரி கரையோரமுள்ள, நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டியில், ஆங்காங்கே விவசாயிகள் சாகுபடி செய்த, மக்காச்சோளம் மற்றும் கேழ்வரகு பயிர்கள் நிலத்தில் சாய்ந்து சேதமாகின. கடுமையான வறட்சியிலும் விவசாயிகள் பாடுபட்டு வளர்த்த வாழைகளும், விவசாய விளை பொருட்களும் சேதமடைந்து இருப்பதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ஆத்தூர்: ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறைக்காற்றக்கு ஆத்தூர், அப்பம்மசமுத்திரம், தென்னங்குடிபாளையம், பைத்தூர், அம்மன்நகர் மழுபுளி கரடு உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் சாகுபடி செய்து இருந்த பாக்கு மரங்கள், தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பைத்தூரை சேர்ந்த அண்ணாமலை, அம்மன்நகர் சுப்ரமணி, பைத்தூர் ஜெயராஜ் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 20ஏக்கர் பரப்பிலான பாக்கு தோப்பில் இருந்த பாக்கு மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்தன. இதேபோல் பைத்தூர் கிராமம் ஜெயராஜ் என்பவரின் வாழை தோப்பில் பயிரிடப்பட்டு இருந்து சுமார் 200 வாழை மரங்கள் சாய்ந்தன. இதேபோல், ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் வாழை தோட்டத்தில் இருந்து 150திற்கும் வாழை மரங்கள் சாய்ந்தன. எனவே சேதமடைந்த மரங்களுக்கு, மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க ேவண்டும் என்றனர்.

 கெங்கவல்லி:  கெங்கவல்லியில் கொட்டித் தீர்த்த கனமழையால் 3500 வாழை மரங்கள், 300 பாக்கு மரங்களும் சாய்ந்தது. மேலும் 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சாய்ந்ததால் மின் துண்டிப்பு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மழையால் ஏற்பட்ட சேதங்கள் குளித்து கணக்கெடுக்க, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, கெங்கவல்லி தாசில்தார் சுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

மேட்டூர்:  மேட்டூர் நகராட்சி 25வது வார்டு இந்திரா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாக்கடை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால், இந்திரா நகர் குடியிருப்பில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். 

Related Stories: