தடுத்து நிறுத்தம்தேன்கனிக்கோட்டை, ஏப். 24: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளம், அஞ்செட்டி பகுதியில் உள்ள மலை கிராமங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மக்கள் பின் தங்கியுள்ளதாலும் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது. ஒரு சில திருமணங்களை, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆனாலும் தொடர் கண்காணிப்பு இல்லாமையால் குழந்தை திருமணங்கள் இப்பகுதிகளில் அதிகமாக நடைபெறுகிறது. பெட்டமுகிலாளம் ஊராட்சி தட்டகரை கிராமத்தில் இரண்டு குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக, பெட்டமுகிலாளம் வருவாய்த்துறை அதிகாரிகள் தேன்கனிகனிக்கோட்டை தாசில்தார் முத்துபாண்டிக்கு தகவல் தெரிவித்தனர். அவர், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். தட்டகரை கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்ற அதிகாரிகள், அங்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதில் சென்னமுத்து என்பவரின் மகளுக்கு 18வயது பூர்த்தியடையவில்லை என தெரிய வந்தது. மற்றொரு பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடைந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து 18வயது பூர்த்தியடையாத சென்னமுத்துவின் மகள் திருமணத்தை அதிகாரிகள் தடுத்தி நிறுத்தினர். மேலும் இரு வீட்டாரையும் அழைத்து, குழந்தை திருமணம் செய்தால் சட்டபடி குற்றம் என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர்களுக்கு எடுத்துறைத்தனர். மேலும், 18வயது பூர்த்தியடைந்த பின் மகளுக்கு திருமணம் செய்யும்படி அறிவுரை வழங்கிச்சென்றனர்.