திருப்பூர், ஏப். 24: திருப்பூர், அரசு மருத்துவமனையில் போதுமான இருக்கைகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர், கோவையிலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாகி பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது வரை முன்னேற்றம் அடையவில்லை. அந்த வகையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பற்றாக்குறை மற்றும் பின் தங்கியுள்ளது. மேலும், வெளிநோயாளிகள் தினமும் 200க்கும் மேற்பட்டவர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருகின்றனர். அதில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவர்களை பார்க்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை உள்ளது. இதில் விபத்துகள், தற்கொலை முயற்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் கொண்டு வருபவர்களை, இங்கு போதிய வசதியில்லை, மருத்துவர் இல்லை எனவே கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என மருத்துவமனை ஊழியர்கள் கூறி வருகின்றனர். மேலும், பிரசவ வார்டு பகுதிகளிலும் போதுமான இருக்கைகள் இல்லாமல், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டவர்கள் நின்று கொண்டு இருக்கும் நிலை நீடிக்கிறது. எனவே, இத்தகைய அடிப்படை தேவைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுத்து நோயாளிகள் சிரமத்தை தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.