×

இலவச பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

ஈரோடு, ஏப். 24: அந்தியூர் அடுத்துள்ள புதுராசாம்பாளையம், பழையராசாம்பாளையம் ஆகிய கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆகையால், கடந்தாண்டு இப்பகுதி மக்களுக்கு இலவச பட்டா வழங்க வருவாய்த்துறை முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது. ஆனால், ஆளுங்கட்சியினர் தலையீடு காரணமாக பட்டா வழங்குவது திடீரென நிறுத்தி  வைக்கப்பட்டது.
இதையடுத்து அந்தியூர் தாலுகா அலுவலகம் சென்ற பொதுமக்கள் பட்டா வழங்க கோரி முறையிட்டனர்.

அப்போது பட்டா தொடர்பான ஆவணங்கள் தாலுகா அலுவலகத்தில் இருந்து மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் மனு அளித்தனர். பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு பட்டா வழங்க தயாராக இருந்த நிலையில் ஆவணங்கள் மாயமானதாக அந்தியூர் வருவாய்துறையினர் கூறுவது அதிர்ச்சியளிப்பதாகவும், தாமதமின்றி பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags : collector ,office ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...