திருப்பூர் மாநகரில் ஓட்டல்களில் தரமற்ற உணவு தயாரிப்பு மாசுகட்டுப்பாட்டு வாரியம் குறட்டை சாய ஆலைகளில் சாயகழிவு நீர் வெளியேற்றம்

திருப்பூர், ஏப். 24:  திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் மாசுகட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் செயல்படுவதால் சாய கழிவுநீர் சாக்கடை மற்றும் நீர் வழி ஓடைகளில் செல்வது தொடர் கதையாக உள்ளது. திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட துணிகளுக்கு சாயமிடும் ஆலைகளும், பிரிண்டிங், பிளிச்சிங் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. திருப்பூர் மாநகர் பகுதிகளில் இயங்கி வரும் சாய ஆலைகளுக்கு தினமும் 20 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. துணிகளுக்கு சாயமிட்டு சாய கழிவு நீரை முழுமையாக சாக்கடை மற்றும் நீர் வழி ஓடைகளில் திறந்து விட்டு வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக சாய ஆலை உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செயல்படுவதால் சாய கழிவு நீர் சாக்கடை மற்றும் நீர் வழி ஓடைகளின் வழியாக திறந்து நொய்யல் ஆற்றில் கலப்பது தொடர்கதையாக உள்ளது.  

இதனால், ஒரத்துப்பாளையம் அணையின் பாசன விவசாயிகளுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதை சாக்காக வைத்துக்கொண்டு ஒரு சில சாய ஆலை உரிமையாளர்கள் சாய கழிவு நீரை சாக்கடை கால்வாய், நீர் வழி ஓடை வழியாக திறந்து விட்டுள்ளனர். மழை நீருடன் சாய கழிவு நீர் கலந்து நொய்யல் ஆற்றில் செல்கிறது. இது குறித்து அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர் திருப்பூர் வடக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் கூற செல்போனில் தொடர்பு கொண்ட போது, அதிகாரிகள் யாரும் போன் எடுக்க வில்லை. திருப்பூர் சாயப்பட்டறைகளால் மண் வளம், நீர் வளம் பாதிக்கப்பட்டு பொது மக்களுக்கு பல்வேறு தோல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மவுனம் காப்பது விவசாயிகள், சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: