×

மின்கம்பங்கள் சாய்ந்தன; மரக்கிளைகள் முறிந்தன

வால்பாறை, ஏப்.24:  கோவை மாவட்டம் வால்பாறை அருகே கன மழை காரணமாக தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் உள்ள 12 வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தது. வால்பாறை பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது.  வால்பாறை முடீஸ் எஸ்டேட்டை அடுத்து உள்ள தோனிமுடி முதல்பிரிவு எஸ்டேட் உள்ளது. தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு 4 பகுதியில் உள்ளது. இங்கு 50 மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் அப்பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து உள்ளது. இடி மின்னலுடன் பெய்த மழை 20 நிமிடம் நீடித்து உள்ளது. 20 நிமிடத்தில் 25 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் ராட்சத மரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்தது. மரத்தின் அருகே சென்ற  மின் கம்பிகளில் கிளைகள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் அப்பகுதியில் உள்ள உயர்மின் அழுத்த மின்கம்பத்தில் மரக்கிளை விழுந்து, தடிமன் அதிகம் கொண்ட மின் கம்பிகள் வளைந்து தேயிலைத்தோட்டத்தில் சாய்ந்தது. எனவே அப்பகுதியில் மின்வினியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

பலத்த சூறைக்காற்று காரணமாக 12 வீடுகளின் சிமென்ட் கூரை தகடுகள் காற்றில் பறந்து 20 அடி தாண்டி விழுந்தது. மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து வீட்டு  உபயோக பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு சென்றிருந்தால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்ததை அறிந்த தொழிலாளர்கள் உடனடியாக வீடுகளுக்கு திரும்பினர். முக்கிய ஆவணங்களை மீட்டு காயவைத்தனர். இந்நிலையில் சம்பவம் குறித்து அறிந்த தோட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, தொழிலாளர்கள் தற்காலிகமாக குடியிருக்க மாற்று வீடுகள் வழங்கி உள்ளனர். வால்பாறை போலீசார், வருவாய்த்துறையினர், மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிகளில் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக பெய்துவரும் கோடை மழையால் வனத்தீ தடுக்கப்பட்டு உள்ளது.  மேலும் தேயிலை, காப்பி தோட்டங்களில் பசுமை திரும்பிவருகிறது.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்