வால்பாறை, ஏப்.24: வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் வரும்பொழுது வனவிலங்குகளுக்கு தின்பண்டங்கள் கண்டிப்பாக தரக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். வன விலங்குகளுக்கு வீடுகளில் சமைத்த மற்றும் மனிதர்கள் சாப்பிடும் உணவு பண்டங்கள் சுற்றுலாப்பயணிகள் கொடுப்பதால் குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் தோல் நோய், முடி உதிர்தல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றன. எனவே வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் தின்பண்டங்கள் கண்டிப்பாக தரக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் காட்டுப்பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. வனப்பகுதியில் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துபவர்கள் மீது வனச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வால்பாறை வனச்சரகர் சக்தி கணேஷ் தெரிவித்துள்ளார்.