கடனுக்கு சிகரெட் தராததால் கடைக்காரரை தாக்கிய சிறுவன் கைது

திருப்பூர், ஏப். 24:  திருப்பூரில் கடனுக்கு சிகரெட் கொடுக்காத பெட்டி கடைக்காரரை கல்லால் தாக்கிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

 திருப்பூர் சாமுண்டிபுரம் தெற்கு ராஜூவ் நகர் மெயின் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் ப்ரியா ஸ்கூல் வீதியில் பெட்டி கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர் கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடனுக்கு சிகரெட் கேட்டுள்ளான். அதற்கு சுரேஷ், சிகரெட் தர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன், சுரேசை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அங்கிருந்த கல்லை எடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுரேசுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.

Related Stories: