திருப்பூர், ஏப். 24: திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் மாசுகட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் செயல்படுவதால் சாய கழிவுநீர் சாக்கடை மற்றும் நீர் வழி ஓடைகளில் செல்வது தொடர் கதையாக உள்ளது. திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட துணிகளுக்கு சாயமிடும் ஆலைகளும், பிரிண்டிங், பிளிச்சிங் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. திருப்பூர் மாநகர் பகுதிகளில் இயங்கி வரும் சாய ஆலைகளுக்கு தினமும் 20 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. துணிகளுக்கு சாயமிட்டு சாய கழிவு நீரை முழுமையாக சாக்கடை மற்றும் நீர் வழி ஓடைகளில் திறந்து விட்டு வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக சாய ஆலை உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செயல்படுவதால் சாய கழிவு நீர் சாக்கடை மற்றும் நீர் வழி ஓடைகளின் வழியாக திறந்து நொய்யல் ஆற்றில் கலப்பது தொடர்கதையாக உள்ளது. இதனால், ஒரத்துப்பாளையம் அணையின் பாசன விவசாயிகளுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.