ஊட்டி, ஏப். 24: ஊட்டி அரசு கலை கல்லூரியில் நீலகிரியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மட்டுமில்லாமல் மற்ற சமவெளி பகுதிகளான கோவை, ஈரோடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் என தற்போது சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இக்கல்லூரியில் பயின்று வருகின்றனர். மேலும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தற்போது இக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி சம்பந்தமான படிப்புகள் உள்ளன. காலை, மதியம் இரு ஷிப்ட்டுகளில் கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கல்லூரியில் 2018ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 13 துறைகளை சார்ந்த 625 இளங்கலை, முதுகலை மாணவ, மாணவியர்களுக்கான பட்டமளிப்பு விழா வரும் 28ம் தேதி ஊட்டியில் நடக்கிறது. இதில் அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பங்கேற்று பட்டங்களை வழங்கி உரையாற்ற உள்ளார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறியிருப்பதாவது: ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 2018ம் ஆண்டு ேதர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான பட்டமளிப்பு விழா வரும் 28ம் தேதி ஞாயிற்றுகிழமை ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள பழங்குடியினர் கலாசார மைய அரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் குருமலேஷ் பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இவ்வாறு ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.