ஈரோடு, ஏப். 24: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் மவுனம் காத்து வருவது பெற்றோர்களை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இணையதளம் மூலம் மே மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.