ரூ.1000 கோடியில் திட்டம் அவினாசி ரோடு மேம்பால பணி முடக்கம்

கோவை, ஏப்.24: கோவை அவினாசி ரோட்டில் டிசைன் 3 முறை மாற்றியும் ஏற்காத நிலையில் உயர் மட்ட மேம்பாலம் பணி முடங்கியது.

 கோவை மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) சார்பில் அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் பீளமேடு ஏர்போர்ட் சந்திப்பு ரோடு வரை (சின்னியம்பாளையம் எல்லை) வரை 9 கி.மீ தூரத்திற்கு உயர் மட்ட மேம்பாலம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. 3.4 கோடி ரூபாய் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. முன்னதாக உப்பிலிபாளையம் முதல் பீளமேடு வரை 160 இடத்தில் மண் ஆய்வு செய்யும் பணி நடந்தது. 50 மீட்டர் இடைவெளியில் மேம்பால தூண் அமைக்க 20 மீட்டர் ஆழம் வரை தோண்டி மண் எடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அண்ணா சிலை, லட்சுமி மில்ஸ், பி.எஸ்.ஜி டெக், மசக்காளிபாளையம் ரோடு சந்திப்பு, ஹோப் காலேஜ், கொடிசியா, ஏர்போர்ட் வரை மேம்பாலத்தில் இருந்து சந்திப்பு ரோடுகளுக்கு சென்று வர இறக்கை பாதை அமைக்கப்படவுள்ளது.

இந்த இறக்கை பாதைக்காக நில ஆர்ஜிதம் செய்ய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த மேம்பாலம் கட்டும் இடத்தில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த பணிகளும் துவக்கப்படவில்லை. நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. மெட்ரோ ரயில் சேவை அவினாசி ரோட்டில் வருமா என உறுதி ெசய்ய முடியாத நிலையிருக்கிறது. உயர் மட்ட மேம்பாலம் கட்டினால் அவினாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டாக டிசைன் பணிகளில் இழுபறி நீடிக்கிறது. கடந்த 2017ம் ஆண்டில் அக்டோபர் மாதம் பணிகள் துவக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் தயாரித்த டிசைன் 3 முறை நிராகரிக்கப்பட்டது. 4வது முறையாக தயாரிக்கப்பட்ட டிசைன் இன்னும் முடிவிற்கு வரவில்லை. நெடுஞ்சாலை திட்ட பிரிவு சென்னை அலுவலக அதிகாரிகள் டிசைனில் குழப்பம் இருப்பதாக கூறி தொடர்ந்து நிராகரிப்பதாக தெரிகிறது. 4வது டிசைன் ஏற்கப்பட்டால் தான், நில ஆர்ஜிதம், டெண்டர் உள்ளிட்ட பணிகள் நடத்தப்படும் நிலையிருக்கிறது.

Related Stories: