தேவாரம், ஏப்.24: கோம்பை கருக்கோடையில் விபத்துக்களை ஏற்படுத்தும் ஆபத்தான போக்குவரத்து பாலத்திற்கு பக்கத்தில் எச்சரிக்கை பலகைகள் இல்லாத நிலையில் இரவில் விபத்துக்கள் அதிகமாகி வருகின்றன. கோம்பை மாநில நெடுஞ்சாலையின் வழியே தேவாரம், போடி உள்ளிட்ட ஊர்களுக்கு தினந்தோறும் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. டூவீலர்கள், ஜீப்கள் போன்றவைகளும் அதிகம் செல்கின்றன. இங்குள்ள கருக்கோடை வழியே செல்லும்போது விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. இதனை தடுத்து நிறுத்திட மாநில நெடுஞ்சாலைத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். குறிப்பாக கோம்பை கருக்கோடை- சிக்கிச்சியம்மன் சாலை வழியே உள்ள போக்குவரத்து பாலங்களில் இரவில் லைட்டுகள் இல்லை.
இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. டூவீலர்களில் வருவோர் மிக எளிதான முறையில் கவிழ்ந்து விபத்துக்களை சந்திக்கின்றனர். மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து பாலத்திற்கு பக்கத்தில் எந்தவிதமான எச்சரிக்கை பலகைகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் வைக்கவில்லை. இதேபோல் பேரூராட்சி நிர்வாகத்திடம் கருக்கோடையில் எரியாத லைட்களை சரிசெய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அதிகாரிகளின் மெத்தனம் காரணமாக தொடர்ந்து இச்சாலையின் வழியே நடக்கும் விபத்துக்களை தடுத்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பொதுமக்கள் கூறுகையில், அதிகரித்து வரும் விபத்துக்களை தடுத்திட கோம்பை-கருக்கோடை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாலங்கள் உள்ள இடங்களில் விபத்து எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவேண்டும். சாலையில் ஒளிரும் விளக்குகள் பதிக்கப்படவேண்டும். எரியாமல் உள்ள தெருவிளக்குகளை பேரூராட்சி அதிகாரிகள் சரிசெய்ய முன்வரவேண்டும் என்றனர்.