×

சினிமாவிற்கு சென்ற கல்லூரி மாணவர் அடித்துகொலை ஆண்டிபட்டியில் பரபரப்பு

ஆண்டிபட்டி, ஏப்.24:  ஆண்டிபட்டியில் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டிபட்டி சீத்தாராம்தாஸ்நகரை சேர்ந்தவர் பாண்டியன் மகன் நாகேந்திர பிரசாந்த்(18). ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக வந்தவர் நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சினிமா பார்ப்பதற்காக சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு பின்புறத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் பலத்த காயத்துடன் பிரசாந்த் இறந்துகிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிபட்டி டிஎஸ்பி.சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் பாலகுரு, உஷா, எஸ்ஐ.பிருந்தாதேவி ஆகியோர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தடயவியல் உதவி இயக்குனர் சங்கர்குமார் தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வடக்கு பக்கமாக விவசாய நிலப்பகுதியில் ஓடி நின்றது. இதனையடுத்து அவரது தந்தை பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அவரது 4  நண்பர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதால் அவர்கள் கொலை செய்தார்களா  என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே கொலை தொடர்பாக ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் 4 பேர் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : college student ,Andipatti ,
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...