தொண்டி, ஏப்.24: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பின் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கொடுர செயலை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டித்து வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பால் 300க்கும் அதிகமானோர் உயிர் இழந்தள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காட்டு மிராண்டித்தனமான இச்செயலை செய்தவர்கள் உடன் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் இதுபோன்ற வன்முறைகள் நிகழாத வண்ணம் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியை குலைக்கும் படி நடந்த இந்த கொடுர கொலை சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 2009ம் ஆண்டு போர் நிறுத்தத்திற்கு பிறகு நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இது உள்ளது. உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு உடன் தண்டிக்கப்பட வேண்டும். ஐநா.வின் மேற்பார்வையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும்’என்றார்.