சோழவந்தான், ஏப். 24: மதுரையிலிருந்து சோழவந்தான் வழியாகச் செல்ல வேண்டிய 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் போக்குவரத்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விதிகளை மீறி வழித்தடம் மாறி செல்வதால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மதுரை மாவட்டத்தின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படும் ஊர் சோழவந்தான். இப்பகுதியில் நெல், வாழை, தென்னை, வெற்றிலை உள்ளிட்ட விவசாயப் பணிகள் நடைபெறுகிறது. இவ்வூருக்கு சுற்றுப்பகுதியிலுள்ள 50க்கும் மேற்ப்பட்ட கிராமங்களிலிருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 50க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இவ்வூர் வழியாக இயக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் சோழவந்தான் வழியாக செல்வதில்லை. மதுரை ஆரப்பாளையத்திலிருந்து சோழவந்தான் வழியாக திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, செம்பட்டி, அய்யம்பாளையம், பெரியகுளம், தேனி, பழநி, உசிலம்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பல பஸ்கள் துவரிமான், மேலக்கால் வழியாகவும், சில சமயநல்லூர், நகரி, ரிஷபம் வழியாகவும் சோழவந்தான் வழித்தடத்தில் மேற்குறிப்பிட்ட ஊர்களுக்கு சென்று வரவேண்டும். தற்போது சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணி நடைபெறுவதால் நகரி வழியாக வரும் பஸ்கள் வர இயலாது. ஆனால் துவரிமான் வழியாக வரும் பஸ்கள் தாராளமாக வந்து செல்லலாம். ஆனால் இவை லாப நோக்கத்திற்காக நேர் வழியில் சமயநல்லூர், வாடிப்பட்டி வழியாக விதிமுறைகளை மீறி செல்கின்றன.