மதுரை, ஏப். 24: வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீரை நிரந்தரமாக தடுக்க வழியின்றி மாநகராட்சி தடுமாறி வருகிறது. இதனால் வைகை சீரழிவதுடன், நோய்கள் பெருகி உயிர்ப்பலிகளும் தொடரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பந்தல்குடி உள்பட 11 கால்வாய்கள் கடந்து செல்கின்றன. இவைகளின் இருபுறமும் கான்க்ரீட் சுவர் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் மழை நீர் ஓடுவதற்கு பதிலாக சாக்கடைதான் ஓடுகிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை இந்த கால்வாய்களில் கலக்கச் செய்கின்றனர். இந்நிலையில் வீட்டில் உருவாகும் கழிவுநீரை சிலர் ரோடுகளில் செல்வதுபோல் அமைத்துள்ளனர். இது தவிர மழைநீர் செல்வதற்காக கட்டப்பட்ட கால்வாய்களில் சாக்கடை ஓடுகிறது.
இதையெல்லாம் மாநகராட்சியால் தடுக்க முடியவில்லை. சாலைகளில் கழிவுநீர் கலந்தவர்களுக்கு அபராதம் விதிக்கும் மாநகராட்சி, வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கச்செய்வதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைகைக்கரை சாலையோர வீட்டு பகுதிகளில் பாதாளசாக்கடை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் உருவாகும் சாக்கடை, குழாய்கள் மூலம் நேரடியாக வைகை ஆற்றில் கலக்கச் செய்யப்படுகிறது. மதுரை மாநகரில் இடைப்பட்ட பகுதியில் 11 கி.மீ., தூரத்திற்கு வைகை ஆறு குறுக்கிட்டுச் செல்கிறது. ஆற்றின் இடைப்பட்ட பகுதியில் 67 இடங்களில் ராட்சத குழாய்கள் அமைத்து பாதாளசாக்கடையை கலக்கச் செய்வது ஆய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. வைகை ஆற்றை சீரழிக்கும் செயலை மாநகராட்சியே முன்நின்று செய்து வருவதுதான் வேதனையான விஷயம்.