பழநி, ஏப். 24: பழநி பஸ்நிலைய நடைமேடையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். பழநி வஉசி மத்திய பஸ்நிலையத்திற்கு நாள்தோறும் 800க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால் இங்கு எப்போதும் பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். தென்மாவட்டங்களில் இருந்து பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் பஸ்களையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பஸ்நிலைய நடைமேடைகளில் டூவீலர், சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் நடைமேடையில் நடக்க முடியாமல், வெயிலில் நடந்து செல்ல வேண்டி உள்ளது.
இதுகுறித்து பழநியை சேர்ந்த ரமேஷ் கூறியதாவது, ‘வவுசி பஸ்நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்கள் நுழையவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை யாருமே கண்டுகொள்வதில்லை. குறிப்பாக பஸ்நிலையத்தில் கடைகள் வைத்துள்ளவர்களும், வெளியூர் செல்பவர்களும்தான் தங்களது வாகனங்களை நடைமேடைகளில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். அதுபோல், பஸ் நிலையத்தின் உள்ளூர் பஸ்கள் நிறுத்திமிடத்தில் உள்ள பிளாட்பாரம் முழுவதும் பழ விற்பனையாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.