செம்பட்டி, ஏப். 24: செம்பட்டி பகுதியில் கனகாம்பர பூக்கள் அறுவடை தீவிரமடைந்துள்ளது. அனைத்து சீசன்களிலும் விலை குறையாமல் விற்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். செம்பட்டியை சுற்றியுள்ள பச்சமலையான்கோட்டை, காமன்பட்டி, குரும்பப்பட்டி, நடுப்பட்டி, கூலம்பட்டி, சித்தையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனகாம்பர பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. மனம் இல்லாவிட்டாலும் நிறத்திற்காக இந்த கனகாம்பர பூக்கள் விலை கொஞ்சமும் குறைவதில்லை. குறிப்பாக திருமண விஷேசங்கள், டெக்கரேசன் வேலைகளுக்கு கனகாம்பர பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பண்டிகை நாட்களில் கனகாம்பர பூக்கள் ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1500 வரை விலை போகும். தற்போது மல்லிகை, சென்டு, செவ்வந்தி, கோழிக்கொண்டை, சம்பங்கி, செவ்வரழி உள்ளிட்ட பூக்களின் விலை குறைந்து வந்தாலும் கனகாம்பர பூக்களின் விலை மட்டும் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.