புதுச்சேரி, ஏப். 24: இலங்கையில் 9 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து புதுச்சேரி மிஷன்வீதி ஜென்மராக்கினி பேராலயம், இதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளிட்ட கோயில்களில் கிழக்கு எஸ்பி மாறன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பாதிரியார்கள், முக்கிய பொறுப்பாளர்களை அழைத்து பாதுகாப்பு பணிகளை மேம்படுத்த ஆலோசனை நடத்தினார்.அனைத்து நுழைவு வாயில்களிலும் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், காவலாளிகளை நியமித்து 24 மணிநேரமும் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டுமென என ஆலோசனை வழங்கப்பட்டது. இதுதவிர கடலோர போலீசாரும், காவல் படையும் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர தேங்காய்திட்டு துறைமுகத்தில் மப்டி உடைகளில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கடற்கரை பகுதிகளில் நடமாடினால் உடனே தகவல் கொடுக்குமாறு மீன்பிடி வலைகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் போலீசார் அறிவுறுத்திவுள்ளனர்.