புதுச்சேரி, ஏப். 24: புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் மற்றும் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசின் நிதியில் ரூ.6 கோடி செலவில் லாஸ்பேட்டையில் உள் விளையாட்டரங்கம் கட்டும் பணி கடந்த 2014ம் ஆண்டு துவங்கியது. நீதிபதிகள் குடியிருப்பு அருகே 40 மீட்டர் அகலம், 80 மீட்டர் நீளத்தில் உள் விளையாட்டரங்கம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு படிப்படியாக வழங்கி வந்தது. மத்திய அரசு ரூ.4.40 கோடி நிதி வழங்கி இருந்த நிலையில் நிலுவைத் தொகையான ரூ.1.60 கோடியை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை தனியார் கட்டுமான நிறுவனம் நிறுத்தியது.