×

வெங்ககல்பட்டி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி போலீசாருடன் மக்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு

கரூர், ஏப். 24: கரூர் திருச்சி பைபாஸ் சாலை வெங்ககல்பட்டி மேம்பாலம் கீழ்ப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி இறந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் வெங்ககல்பட்டி தெற்கு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி(75). இவர், நேற்று காலை மாட்டில்  பால் கறந்து , அதனை  எடுத்து கொண்டு தோரணக்கல்பட்டி பகுதியில் உள்ள சொசைட்டிக்கு பைக்கில் ஊற்றச் சென்றார்.பாலை ஊற்றி விட்டு திரும்பவும் வெங்ககல்பட்டி நோக்கி வந்தார். கரூர் திருச்சி பைபாஸ் சாலை வெங்ககல்பட்டி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் வளைய முயன்ற போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஓன்று, பழனிசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர். தாந்தோணிமலை போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.சர்வீஸ் சாலையில் அடிக்கடி வாகனங்கள் வளையும் போது தான் இதுபோல விபத்து நடைபெறுகிறது. எனவே, சர்வீஸ் சாலை போக்குவரத்தினை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போலீசாருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.மேலும், கரூர் திருச்சி பைபாஸ் சாலையின் இருபுறமும் வந்த வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அரைமணி நேரம் நடந்த இந்த பிரச்னை காரணமாக, இரண்டு புறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையாக நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி கும்மராஜா, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை  நடத்தினார். இதில் சமரசமடைந்த மக்கள் அனைவரும் கலைந்து  சென்றனர். இதன் பிறகு, அனைத்து வாகனங்களும்  சென்றன.


Tags : Velankalpatti ,area ,victim ,police officer ,
× RELATED வாட்டி வதைக்கும்...