×

மீன்பிடி தடைகாலம் துவங்கியதால் உபகரணங்கள் சீரமைப்பு பணி தீவிரம்

சேதுபாவாசத்திரம், ஏப். 24: மீன்பிடி தடைகாலத்தையொட்டி சேதுபாவாசத்திரம் பகுதியில் விசைப்படகு மீனவர்களுக்கு தங்களது உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்கள் மீன் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்ய ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் தடை விதித்து வருகிறது. வழக்கம்போல் இந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதி தடைகாலம் துவங்கி இன்றுடன் 9 நாட்களுக்கு மேலாகிறது. விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் ஆண்டுதோறும் தடைகாலம் தவிர்த்து இடைவெளியின்றி மீன்பிடி தொழில் செய்வது வழக்கம்.தவிர்க்க முடியாத காரணங்களால் வேலை நிறுத்தமோ, போராட்டங்களோ அறிவித்தால் தான் ஒரு சில நாட்கள் மட்டும் மீன்பிடி தொழில் தடைபடும். இந்த நேரத்தில் படகுகளையோ, வலைகளையோ மற்றும் மற்ற உபகரணங்களையோ சீரமைப்பு செய்வது முடியாத காரியம். எனவே அரசு அறிவிக்கக்கூடிய தடைகாலத்தை பயன்படுத்தி படகு, வலை மற்றும் உபகரணங்களை பழுதுபார்ப்பது தான் மீனவர்களின் வழக்கம்.

இந்த தடைகாலத்தால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் 246 விசைப்படகுகள் இருந்தது. கடந்தாண்டு வீசிய கஜா புயலில் 188 விசைப்படகுகள் சுக்குநூறாக நொறுங்கியது. 88 படகுகள் பகுதி சேதமடைந்தது.5 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் 134 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. ஆகையால் கடந்த ஒருமாத காலமாக குறைந்தளவு படகுகள் மட்டுமே மீன்பிடி தொழில் செய்து வந்தது. தற்போது இந்த படகுகள் அனைத்தையும் மீனவர்கள் மராமத்து பணிகள் பார்த்து வர்ணம் தீட்டி வருகின்றனர். மேலும் மீன்பிடி தொழிலுக்கு உயிர்நாடியாக உள்ள வலைகள், மற்ற உபகரணங்களை பழுதுபார்க்கும் பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...