கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்தால் அதிக மகசூல் விவசாயிகளுக்கு ஆலோசனை

சேதுபாவாசத்திரம் ஏப். 24: சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சையது இப்ராஹிம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஆண்டிக்காடு, பள்ளத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. கோடை உழவுக்கு இதுவே ஏற்ற தருணம். அறுவடை செய்து தரிசாக கிடக்கும் நிலங்களை விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம். முதலில் வயலை இரும்பு கலப்பை கொண்டோ அல்லது டிராக்டர் கொண்டோ குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக புழுதி உழவு செய்ய வேண்டும்.இவ்வாறு கோடை உழவு மேற்கொள்வதால் புல்- பூண்டுகள் வேர் அறுந்து கருகி விடுகிறது. மண் பொளபொளப்பு தன்மையடைடைகிறது. பயிர் பருவகாலங்களில் சிலவகை பூச்சிகளின் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூண்டுபுழுக்களாக மாறி பேரிச்சங்கொட்டை போன்ற உருவத்தில் மண்ணுக்கடியில் வளர்ந்து கொண்டிருக்கும். உழவு செய்வதன் மூலம் புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அவை பறவைகளால் பிடித்து தின்று அழிக்கப்படுகிறது.

இதன்மூலம் அடுத்த பயிர் சாகுபடியின்போது பூச்சிகளின் தாக்குதல் வெகுவாக குறைகிறது. களைச்செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது. மண்ணில் நீர்பிடிப்பு தன்மை பெருகிறது.  மண்ணின் பவுதீக தன்மை மேம்படுகிறது.

உரம் சமச்சீராக கிடைத்து வேர் வளர்ச்சி தூண்டப்படுவதுடன் பயிர் செழித்து வளர்கிறது. இதனால் மகசூல் கூடுதலாக கிடைக்கிறது. அதேநேரம் மணல்சாரி, களர் மற்றும் உவர் நிலங்களில் கோடை உழவை தவிர்க்க வேண்டும். காரணம் கோடை உழவால் மணல்சாரி நிலங்களில் ஈரத்தன்மை குறைகிறது.களர் மற்றும் உவர் நிலங்களில் நீர் ஆவியாகி விடுவதால் உப்புத்தன்மை ஏற்படும் அபாயம் வரும். தற்போது ஈரத்தை பயன்படுத்தி கோடை உழவு செய்ய தவறும் விவசாயிகள் எதிர்வரும் கோடை காலத்தில் பெய்யக்கூடிய மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்வது நல்ல மகசூலை கொடுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: