சேதுபாவாசத்திரம் ஏப். 24: சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சையது இப்ராஹிம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஆண்டிக்காடு, பள்ளத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. கோடை உழவுக்கு இதுவே ஏற்ற தருணம். அறுவடை செய்து தரிசாக கிடக்கும் நிலங்களை விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம். முதலில் வயலை இரும்பு கலப்பை கொண்டோ அல்லது டிராக்டர் கொண்டோ குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக புழுதி உழவு செய்ய வேண்டும்.இவ்வாறு கோடை உழவு மேற்கொள்வதால் புல்- பூண்டுகள் வேர் அறுந்து கருகி விடுகிறது. மண் பொளபொளப்பு தன்மையடைடைகிறது. பயிர் பருவகாலங்களில் சிலவகை பூச்சிகளின் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூண்டுபுழுக்களாக மாறி பேரிச்சங்கொட்டை போன்ற உருவத்தில் மண்ணுக்கடியில் வளர்ந்து கொண்டிருக்கும். உழவு செய்வதன் மூலம் புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அவை பறவைகளால் பிடித்து தின்று அழிக்கப்படுகிறது.