திருப்பத்தூர், ஏப்.24: திருப்பத்தூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் சடலத்தை வாங்க மறுத்து, அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் செவ்வாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்நாதன்(45), விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தலின்போது, அதே பகுதியை சேர்ந்த வேலம்மாள் என்பவரது வீட்டின் அருகே வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி சின்னத்தை ஜெகன்நாதன் அழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வேலம்மாள் கந்திலி ேபாலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் ஜெகன்நாதனிடம் விசாரித்தனர். மேலும், நேற்று முன்தினம் மாலை போலீசார், ஜெகன்நாதனின் மனைவியிடம், ‘நாங்கள் அழைக்கும்போது உங்கள் கணவர் விசாரணைக்கு ஆஜராகவேண்டும், தவறினால் வழக்கு விசாரணையை வேலூருக்கு மாற்ற வேண்டியிருக்கும்’ என கூறினார்களாம்.
தகவலறிந்து அச்சமடைந்த ஜெகன்நாதன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறி, செவ்வாத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.