சென்னை கடற்கரை சந்திப்பில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக சுற்றுவட்ட ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை கடற்கரை ரயில் சந்திப்பில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக சுற்றுவட்டப் பாதையில் மின்சார ரயில் இயக்க வேண்டும் என காஞ்சிபுரம் பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தற்போது தெற்கு ரயில்வே நிறைவேற்றியுள்ளது.சென்னை கடற்கரை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக ஒரு மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், வழியாக மற்றொரு மின்சார ரயில் என 2 மின்சார ரயில்கள் சுற்றுவட்ட பாதையில் நேற்று முதல் இயக்கப்பட்டன. ரயில்வே துறையில், நாட்டிலேயே மிக நீண்ட தூரமுள்ள 194 கிமீ சுற்றுவட்டப் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே இருந்த குறுகிய பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி கடந்த 1994 முதல் 2000ம் ஆண்டு வரை நடந்தது. அதன்பின் ரயில் பாதையை மின்மயமாக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.ஆனால், அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தள நிர்வாகம், தங்களது எல்லைக்கு அருகே ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்கு தடை விதித்தது. ரயில்வே பாதை மின்மயமாக்கப்பட்டால், அதில் செல்லும் 25 ஆயிரம் கிலோ வாட் மின்சாரம், தங்களது தளத்தில் இருந்து விமானம் பறப்பதற்கும், இறங்குவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என காரணம் கூறியது.

மேலும், அரக்கோணம் - தக்கோலம் இடையே 6.5 கிமீ ரயில் பாதையை மின்மயமாக்கக்கூடாது எனவும் ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து அங்கு மட்டும் மின்மயமாக்கல் பணி நிறுத்தப்பட்டது. இதனால் தக்கோலம் வரை மின் மயமாக்கப்பட்டு செங்கல்பட்டு வழியாக சென்னை - திருமால்பூர் இடையே மட்டும் மின்சார ரயில் இயக்கப்பட்டது.இதற்கிடையில், ஐஎன்எஸ் ராஜாளி நிர்வாகத்தின் ஆலோசனைபடி, கல்லாறு பகுதியில் இருந்து அரக்கோணம் வரை 5 கிமீ பாதைக்கு பதிலாக, கல்லாறில் இருந்து பொய்ப்பாக்கம், பருத்திபுத்தூர், மேல்பாக்கம் வழியாக அரக்கோணம் வரை 9.8 கிமீ தூரத்துக்கு மாற்றுப்பாதையை, ரயில்வே நிர்வாகம் அமைத்து, பணிகள் முடிவடைந்துள்ளன. இதையொட்டி,  சுற்றுவட்டப்பாதை ரயில் சேவை தொடங்கப்பட்டது.சென்னை கடற்கரை சந்திப்பு ரயில் நிலையத்தில், காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 12.30 மணிக்கு அரக்கோணத்தில் சேரும். அங்கிருந்து 12.35 மணிக்கு புறப்பட்டு 1.15 மணிக்கு திருமால்பூர், 1.30 மணிக்கு காஞ்சிபுரம், 2.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். செங்கல்பட்டில் இருந்து 2.25 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு தாம்பரம், மாலை 4.10 மணிக்கு மீண்டும் சென்னை கடற்கரை வந்தடையும்.

அதேபோல், சென்னை கடற்கரையில் 9.50க்கு புறப்படும் மற்றொரு ரயில் 10.45 மணிக்கு தாம்பரம், 11.35 மணிக்கு செங்கல்பட்டு சந்திப்பு வந்தடையும். அங்கிருந்து 11.40  மணிக்கு புறப்பட்டு 12.25 மணிக்கு காஞ்சிபுரம், பகல் 1 மணிக்கு திருமால்பூர் சென்று சேரும். அங்கிருந்து 1.20 மணிக்கு புறப்பட்டு 2 மணிக்கு அரக்கோணம் சந்திப்பு சென்றடையும். அங்கிருந்து 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு கடற்கரை சென்றடையும். இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க முன்னாள் தலைவர் சீத்தாராமன் கூறுகையில், சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். சுற்றுவட்ட ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அது இப்போதுதான் நிறைவேறியது.மேலும் சென்னை - செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் - காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்துக்கு ரயில் பாதை அமைத்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக இயக்கப்பட்டுள்ள இந்த ரயில்கள் மூலம் வடசென்னை பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு கட்டமான தொழிலாளர்கள், வியாபாரிகள், தனியார் கம்பெனி ஊழியர்கள் குறைந்த செலவில் சென்று வரலாம் என்றார்.

தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு சங்க மாவட்ட தலைவர் வக்கீல் பெர்ரி கூறியதாவது, காஞ்சிபுரம் பகுதி மக்கள் சார்பில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளிடம் சுற்றுவட்ட ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதன்படி 2 ரயில் இயக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.தென் மாவட்டங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு அரிசி, வடமாநிலங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கோதுமை, பருப்பு உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அரக்கோணம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக இருந்தது. இதன்மூலம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல பயணிகளின் சிரமம் குறையும்.

96 கி.மீ. 40 நிமிடம் மிச்சம்

இந்த புதிய ரயில் பாதை மூலம் காவேரிபாக்கம், ஒச்சேரி, திருமால்பூர் உள்ளிட்ட சில கிராம மக்கள் ரயில் வசதியை பெறுவார்கள். செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூர்  செல்ல சென்னை சென்ட்ரல் அல்லது கடற்கரை ரயில் நிலையம் செல்ல வேண்டும். இது சுமார் 106 கிமீ தூரம்.செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூருக்கு அரக்கோணம் வழியாக செல்ல 96 கிமீ தூரம் மட்டுமே. இதனால், பயண நேரம் 40 நிமிடம் குறையும். இதுபோல வண்டலூர், மறைமலைநகர், செங்கல்பட்டில் இருந்து ஆவடி, பட்டாபிராம், அம்பத்தூர் செல்ல இதுவரை பஸ் பயணத்தையே நம்பி இருந்த மக்கள், இந்த புதிய ரயில் பாதை மூலம் பல சிரமங்களை தவிர்க்கலாம்.

கூடுதல் ரயில்கள் வேண்டும்

சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை முன்னாள் தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: கோயில்களின் நகரம் என்ற காஞ்சிபுரத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இதையொட்டி, ரயில் வசதி இல்லாமல் ஏராளமானோர் அவதிப்பட்டனர்.இதுகுறித்து கலெக்டர், தெற்கு ரயில்வே அதிகாரிகள் என அனைவரிடமும் மனு கொடுத்துள்ளேன். இதனை, சமூக அக்கரையோடு தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டனர். அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரத்துக்கு சுற்றுவட்டப்பாதை ரயில் இயக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நலன் கருதி தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றார்.

Related Stories: